கோவை: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடித்து ஜமேஷா முபின் (29) பலியானார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான 75 கிலோ மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் தமிழகத்தில் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட 43 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 43 இடங்களிலும், கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் வெடிகுண்டு வெடித்து ஜமேஷா முபின் பலியானது தொடர்பாக இந்த சோதனை நடந்தது. என்ஐஏ நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ்க்கு ‘பயத்’ (தீவிரவாத உறுதிமொழி) எடுத்த பிறகு தற்கொலை தாக்குதலை நடத்தி, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் அடையாளங்களுக்கு அதிக சேதம் விளைவிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் செயல்பட்டுள்ளார். தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு என்ஐஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.